பகவத் கீதை தேசிய நூல் : பாஜக முயற்சி " தேச நலனுக்கு உகந்ததல்ல"

Dec 08, 2014, 04:52 PM

Subscribe

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரியிருப்பது பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டின் நலனுக்கு உகந்ததாயிருக்காது என்கிறார் காந்தியச் சிந்தனையாளரும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான டாக்டர் ஜெயப்பிரகாசம்.

பகவத் கீதையை காந்தி போன்றோர் உயர்வாக மதித்தனர் என்பது உண்மை ஆனால், கீதை குறித்த அவரது பார்வைக்கும் மற்றவர்களின் பார்வைக்கும் வேறுபாடு உள்ளது. நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் வன்முறையாலும் தீமையை வெல்வது நீதியானதுதான் என்ற அர்த்தப்படுத்தினால், இந்த அணு யுகத்தில் அது பேரழிவை உருவாக்கும் என்றார் ஜெயப்பிரகாசம்.

காந்தியோ, கீதையை நன்மைக்கும் தீமைக்குமான மோதலில் மனித மனது , தீமையை வென்று நன்மையாக மாற்றுகிறது என்று அர்த்தப்படுத்தினார் , என்றார் ஜெயப்பிரகாசம். இது சத்யாகிரஹத்திற்கான ஒரு நூல் என்று காந்தி பொருள்கொண்டார், பாரதி கூட அப்படித்தான் அதைப் பார்த்தார் என்றார் ஜெயப்பிரகாசம்.

அதே சமயம் அம்பேதகர் போன்றோர் கீதையை போரை நியாயப்படுத்தும் ஒரு புத்தகமாகவும், வர்ண அமைப்பை நியாயப்படுத்தும் ஆவணமாகவும் பார்த்தது குறித்து குறிப்பிட்ட ஜெயப்பிரகாசம், திலகர் கூட தனது " கீதா ரகசியம்" என்ற புத்தகத்தில், கீதையை, போருக்கான புத்தகமாகவே பார்த்தார் என்றார். எனவே இது போன்ற திருமறைகளை மறு வாசிப்பு செய்வது அவசியம், தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையற்றவற்றை ஒதுக்கித் தள்ளுவது அவசியம் என்றார் அவர்.

மற்ற மதங்களில் உள்ளது போல ஒரே ஒரு நூல்தான் இந்து மதத்தில் திருமறை என்று மதிக்கப்படும் இடத்தில் இல்லை என்றார் ஜெயப்பிரகாசம். தென்னிந்திய மரபில் சைவ சித்தாந்தம் மற்றும் வைணவ சித்தாந்தத்திலும், பகவத் கீதையை அறியாத ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். எனவே பாஜகவின் இந்த முயற்சி என்பது , இந்து சமயத்தை மையப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இருக்கிறது என்றார் ஜெயப்பிரகாசம்.

திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்கவேண்டும் என்ற கருத்தை வரவேற்ற ஜெயப்பிரகாசம், ஆனால் இந்தக் கோரிக்கையின் விளைவு இது போல பல நூல்களை தேசிய நூல்களாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளுக்குத்தான் இட்டுச்செல்லும் என்றார்.

அதே சமயத்தில் ஒரு நாட்டுக்கு தேசிய நூல் என்ற ஒன்று அவசியம்தானா என்று கேட்டதற்கு, நாடு பல பிரச்சனைகளை எதிர்நோக்கும் நிலையில், இது போன்ற பிரச்சனைகளைக் கையில் எடுப்பது தேவையற்றது என்றும் அவர் கூறினார்.