தாம்பத்ய உறவுக்குள் பாலியல் வல்லுறவு- குற்றமா?
Share
Subscribe
இந்தியாவில் திருமண உறவுக்குள் பாலியல் வல்லுறவுகள் நடக்கும் சம்பவங்கள் அதிகமாக இருப்பதாக ஐ.நா மன்ற புள்ளிவிவரங்கள் காட்டுவதாகவும், எனவே இந்திய அரசு இந்த தாம்பத்ய உறவுக்குள் நடக்கும் பாலியல் வல்லுறவை குற்றமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய உள்துறை துணை அமைச்சர் ஹரிபாய் சௌத்ரி, இந்தியாவில் நிலவும் சமூக, பொருளாதார மற்றும் கலாசார காரணங்களால் , இதை ஒரு குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்க முடியாது என்று பதிலளித்திருக்கிறார்.
ஐநா மன்றம் சமீபத்தில் இந்தியாவில் திருமண உறவுக்குள் வரும் பெண்களில் சுமார் 75 சதவீதத்தினர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதாகக் கூறியிருப்பதாகக் கூறிய கனிமொழி, இந்தக் குற்றத்தை இந்திய தண்டனை சட்டப்பிரிவுக்குள் ஒரு குற்றமாக்க தேவையான சட்டத்திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்திய அரசின் இந்த நிலைப்பாடு குறித்து குடும்பச் சட்டம் குறித்த வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர், கீதா ராமசேஷன் , பிபிசி தமிழோசையிடம் பேசுகையில், இந்த குற்றம் மேலை நாடுகளிலேயே கடந்த சுமார் 20 அல்லது 30 வருடங்களாகவே ஒரு குற்றமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் , இந்திய தண்டனை சட்டத்தில் பாலியல் வல்லுறவு என்ற குற்றப்பிரிவில், இந்த தாம்பத்ய உறவுக்குள் நடக்கும் பாலியல் வல்லுறவுக்கு விதிவிலக்குத் தரப்பட்டிருக்கிறது என்றார்.
ஆனாலும், இந்தியாவில் , விவாகரத்து வழக்குகளில் பாலியல் துஷ்பிரயோகம், வீட்டில் நடக்கும் வன்முறை ( domestic violence) போன்றவை குற்றப்பிரிவுகளாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் நடந்த நிர்பயா வல்லுறவு வழக்கை அடுத்து பாலியல் வல்லுறவு என்பதற்கான விளக்கங்கள் விஸ்தரிக்கப்பட்டாலும், திருமண பந்தத்துக்குள் நடக்கும் பாலியல் வல்லுறவு ஒரு குற்றமாக இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இதற்கான கலாசார காரணங்கள் இருப்பதாக அரசு சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இதை ஒரு குற்றமாக அங்கீகரிக்க பெண்ணிய அமைப்புகள் மேலும் இயக்கங்களை நடத்தினால்தான் அது நடக்கும் என்றார்.
அது போல விவாகரத்து வழக்குகளில்,தாம்பத்ய உறவை மீண்டும் பெறும் உரிமை ( restitution of conjugal rights) ஒரு உரிமையாக கருதப்பட்டு வருகிறது. இது ஒரு உரிமையாகக் கருதப்படக்கூடாது என்றார் கீதா ராமசேஷன்.
