"அரிசிமீதான சேவை வரி விலையை உயர்த்தும்; தட்டுப்பாட்டை உருவாக்கும்"
Share
Subscribe
இந்திய அரசு அரிசிக்கு விதித்திருக்கும் புதிய சேவைவரியால் அரசிவிலை உயருமென்றும், அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுமென்றும் கூறுகிறார் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் கே எஸ் ஜெகதீசன்.
நெல் மற்றும் அரிசிவியாபாரிகள் மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளும் இந்திய அரசின் இந்த முடிவை கண்டித்திருக்கிறார்கள்.
இந்திய அரசாங்கம் கோதுமைக்கு விலக்கு அளித்துவிட்டு அரிசி மீது சேவை வரி விதித்திருப்பதாக திமுக தலைவர் மு கருணாநிதி கண்டித்துள்ளார்.அரிசி மீது சேவை வரி விதிக்கப்பட்டிருப்பது தொடர்பில் தமிழ்நாட்டை ஆளும் அதிமுக வாய்திறக்காமல் இருப்பதாகவும் கூறி அவர் விமர்சித்துள்ளார்.
மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத பல அறிவிப்புகளை மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் விளைபொருள் என்று வரையறுத்து சேவை வரியிலிருந்து கோதுமைக்கு விலக்கு அளித்துள்ள மத்திய அரசு, அந்த பட்டியலில் இருந்துவந்த அரிசியை அந்த பட்டியலில் இருந்து நீக்கி அர்சிக்கு அவ்வாறு விலக்கு அளிக்காதது, வட இந்தியர்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் இடையில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்பதை குறிப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
12.36 சதவீதம் சேவை வரி விதிப்பதன் மூலமாக தென்னிந்தியர்களின் ஆதார உணவான அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
நெல் என்பது வேளாண் விளைபொருள் அதுவே தோல் நீக்கி அரிசியாகும்போது அது வேளாண் விளைபொருள் ஆகாது எனவே அதற்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்ற மத்திய அரசின் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்றும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
அரிசி மீது சேவை வரி விதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசாங்கம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
