" திமுக தோல்விக்குப் பொறுப்பு மு.க.ஸ்டாலின் " - திமுக எம்.பி
Share
Subscribe
திமுக , நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் சந்தித்த படுதோல்விக்கு முக்கிய காரணம், கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிரசார யுக்தி மற்றும் தலைமையே என்று குற்றம் சாட்டுகிறார், திமுக மாநிலங்களை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம்.
இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் , திமுக சந்தித்த படுதோல்வியை அடுத்து, கட்சித் தலைமை பல முக்கிய கட்சிப் பிரமுகர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இந்த ஒழுங்கு நடவடிக்கை நோட்டிஸ் அனுப்ப்ப்பட்ட திமுக மாநிலங்களவை உறுப்பினரான, கே.பி.ராமலிங்கம் அவர்கள் இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிடும்போது, தனது தொகுதியான நாமக்கல்லில் மட்டும் தோற்றிருந்தால் , அதற்கு தன்மீது பொறுப்பு சுமத்த முடியும், ஆனால், கட்சி மாநிலம் முழுவதும் தோற்றிருக்கும் நிலையில், தோல்விக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய வேண்டும் என்றார்.
கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், யார் ஆட்சி அமைப்பார்கள், யார் பிரதமர் என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத நிலையில் பிரசார வியூகம் வகுக்கப்பட்டது என்றார் ராமலிங்கம்.
மேலும், கட்சியின் பிரசாரத்துக்கு முழு முதல் பொறுப்பாக இருந்தவர் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் என்ற வகையில், அவரே தேர்தலில் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றார் அவர்.
கட்சியின் தலைவர் என்று கூட்டணிக் கட்சிகள் தன்னை அங்கீகரிக்கவேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினார் என்றும், இதனாலேயே, விஜய்காந்த் , ராமதாஸ் போன்றவர்கள் கட்சியின் கூட்டணியில் சேர தயக்கம் காட்டியதாகவும் அவர் கூறினார்.
மேலும், கட்சி வேட்பாளர் தேர்வு போன்றவற்றில் ஸ்டாலின் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்பது ஏற்கனவே ஊடகங்களில் வந்த செய்திதான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் ஸ்டாலினை இந்த அளவுக்கு தேர்தல் குறித்த முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த அனுமதித்த கட்சித் தலைவர் கருணாநிதிக்கு இதில் பொறுப்பு இல்லையா என்று கேட்டதற்கு, கருணாநிதி “சூழ்நிலையின் கைதியாக” இருந்தார் எனவே அவருக்கு இதில் முழுப்பொறுப்பு இல்லை, ஆனால் இந்தக் கேள்வியை அவரிடம்தான் கேட்கவேண்டும் என்று கூறினார் ராமலிங்கம்.
கட்சியில் தலைவர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம்தான் மக்களை கட்சியின் மீது வெறுப்பு கொள்ள வைத்ததாக வரும் விமர்சனங்கள் பற்றி கேட்டதற்கு பதிலளித்த ராமலிங்கம், இந்த விமர்சனங்கள் முதலில் கட்சியில் தலைவரின் குடும்ப உறுப்பினர் என்ற சலுகையில் கட்சிக்குள் வந்த ஸ்டாலின் மீதுதான் வைக்கப்படவேண்டும் என்றார்.
கட்சியில் இந்தப் பிரச்சினைகள் முடிந்து, சுமுகத்தீர்வு ஒன்று எட்டப்பட்டு கட்சி மீண்டும் பலப்படும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும், ஆனால் அது நடக்கவேண்டுமானால், ஸ்டாலின் கட்சி முன்னணிப் பொறுப்பிலிருந்து ஒதுங்க வேண்டும் என்றார் ராமலிங்கம்.